பிள்ளைகளுக்கான பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த ஒன்றரை வயது குழந்தை, அங்கிருந்த சிறிய குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெதமுலன, கதமடித்த பகுதியைச் சேர்ந்த 1 ஒன்றரை வயது ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தாய், வழமை போன்று குழந்தையை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு தொழிலுக்குச் சென்றுள்ள நிலையில், பராமரிப்பு நிலையத்தின் காப்பாளர் தாயைத் தொடர்புகொண்டு மித்தெனிய, காரியமடித்த வைத்தியசாலைக்கு வருமாறு அறிவித்துள்ளார்.
தாய் வைத்தியசாலைக்குச் சென்றபோதே, குழந்தை பராமரிப்பு நிலையத்தில் இருந்த சிறு குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதை அறிந்துள்ளார்.
குழந்தையின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட குற்றச்சாட்டில், குறித்த பராமரிப்பு நிலையத்தின் காப்பாளர் எம்பிலிபிட்டிய தலைமையகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, எம்பிலிபிட்டிய பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




