பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதாக தகவல்

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த தொழில்நுட்பக் கோளாறினால் தேசிய மின்சாரக் கட்டத்தின் அதிர்வெண்ணில் மாற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தில் உள்ள நீராவி விசையாழி தானாக மூடப்பட்டு மின்சார அமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.

இதன் விளைவாக தேசிய மின்சாரக் கட்டம் சுமார் 55 மெகாவாட் மின் உற்பத்தித் திறனை இழந்ததாகவும், அதனால் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதாகவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

எனினும், சில நிமிடங்களுக்குள் நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.