யாழ்ப்பாணத்துக்கான உள்ளக விளையாட்டரங்கை அமைப்பதற்கான காணியை தான் நன்கொடையாக கொடுத்து உதவ தயாராக உள்ளதாக சமூக நலத்துறை முன்னாள் அமைச்சர் கந்தையா வைத்தியநாதனின் பேர்த்தியாரான கௌரி பொன்னையா தெரிவித்தார்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் புதன்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
யாழ். குடாநாட்டில் உள்ளக விளையாட்டு அரங்கத்தை அமைப்பதற்கு முயற்சிக்கின்றார்கள் என கேள்வியுற்றேன். அதற்காக புராதன மரங்களை அழிக்கவுள்ளதாகவும் கேள்வியுற்றேன்.
இயற்கையை அழிக்காது, புராதன மரங்களை அழிக்காது, உள்ளக விளையாட்டரங்கை சகலரும் பயன்பெறத்தக்க வகையில் மாற்றுவதற்கு எம்மால் ஒத்துழைப்பு வழங்க முடியும்.
எமது பரம்பரைக்கு உரிய கோப்பாயில் உள்ள நிலங்களில் ஒன்றை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு வழங்குவதன் ஊடாக அபிவிருத்திக்கு ஒத்துழைக்க நாம் முயற்சிக்கின்றோம். அதற்காக தவிசாளர் தியாகராஜா நிரோஸை சந்தித்து இணக்கத்தினை வெளிப்படுத்தியுள்ளோம்.
இளைஞர்கள் பெருமளவில் வாழக்கூடிய கோப்பாய் பகுதியில் உள்ளக விளையாட்டரங்கினை அமைக்க அரசாங்கம் முன்வருமாயின் எமது காணிகளில் ஒன்றை வழங்க பிரதேச சபையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கமுடியும் என்றார்.





