காட்டுமிராண்டித்தனமாக மிக மோசமாக பேசும் ஒருசில உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் உள்ளார்கள். அவர்கள் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசுகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து தண்டனை வழங்குங்கள் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற முப்படைச் சட்டங்களின் ஒழுங்குவிதிகள் மற்றும் அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் சுனில் வட்டகல,
எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி உரையாற்றும் போது ஆளும் கட்சியின் பெண் உறுப்பினரை அவமதிக்கும் வகையில் மிகவும் கீழ்த்தரமான வார்த்தையை பிரயோகித்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
இவர் கடந்த பாராளுமன்றத்தில் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை காசுக்காக விற்பனை செய்தார்.இவர் தான் கீழ்த்தரமானவர் என்றார்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கீழ்த்தரமாக பேசினார் என்பதை சுட்டிக்காட்டி பிரதி அமைச்சர் கீழ்த்தரமான, சபைக்கு பொறுத்தமற்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார். அவற்றை ஹன்சாட் பதிப்பில் இருந்து நீக்குங்கள். இரு தரப்பும் முறையாக செயற்பட வேண்டும் என்றார்.
இதன்போது சபைக்குத் தலைமைத் தாங்கிய பிரதி சபாநாயகர், ரிஸ்வி சாலி, சபைக்கு பொறுந்தாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்குமாயின் அவை ஹன்சாட் பதிப்பில் இருந்து நீக்கப்படும் என்று சபைக்கு அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, சபைக்கு பொறுந்தாக சொல்லை ஹன்சாட்டில் இருந்து நீக்குவதற்காக பிரதி சபாநாயகர் விடுத்த அறிப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் எதிர்க்கட்சியில் ஒருசிலர் சபையில் மிக மோசமாக நடந்துக் கொள்கிறார்கள். கீழ்த்தரமாக பேசுகிறார்கள். அவற்றை பாராளுமன்ற செயலாளர் சபை பார்த்துக் கொண்டிருக்கிறது. எவ்வித நடவடிக்கைகளையும் அவர்கள் எடுப்பதில்லை.
காட்டுமிராண்டித்தனமாக மிக மோசமாக பேசும் ஒருசில உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் உள்ளார்கள். அவர்கள் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசுகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து தண்டனை வழங்குங்கள்.அதற்கான அதிகாரம் நிலையியல் கட்டளை ஊடாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதன்போது சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒழுக்கமான முறையில் பேச வேண்டும். நடந்துக் கொள்ள வேண்டும். சபைக்கு பொறுந்தாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்குமாயின் அவை ஹன்சாட் பதிப்பில் இருந்து முழுமையாக நீக்கப்படும். ஒழுக்கமான சபையில் சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆகவே பாராளுமன்றத்தில் பேசப்படும் விதம் குறித்து சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்று அறிவித்தார்.




