மக்களின் சுமையை மேலும் அதிகரித்திருக்கிறது அரசாங்கம்

அரசாங்கம் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம், ஏற்கனவே மக்கள் முகங்கொடுத்திருக்கும் தாங்கமுடியாத சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் செயற்பட்டிருப்பது குறித்து யுக்தி கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் உழைக்கும் மக்களின் இயக்கங்களையும் ஜனநாயகத்தையும் நீதியையும் வென்றெடுப்பதற்கு மக்களால் நடாத்தப்படும் போராட்டங்களையும் ஆதரிக்கும் மக்கள் மன்றமான யுக்திய கூட்டமைப்பினால் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டமூலம் கடந்த 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் ஜயந்தவின் கூற்றுப்படி, போதிய அளவில் ஒழுங்குபடுத்தப்படாத நுண்நிதி மற்றும் பணமாகக் கடன் வழங்கும் துறையை உரிமம் வழங்கி கண்காணிக்கும் ஒரு அதிகாரசபையை நிறுவுவதும், அதன்மூலம் கடன் பெறுபவர்களை சுரண்டலிலிருந்து பாதுகாப்பதுடன் நிதியியல் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதுமே இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆனால் ‘உயர் வட்டி வீதங்களுடன்கூடிய சுரண்டல் தன்மை கொண்ட நுண்நிதிக்கடன்களால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்’ என தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இப்போது மக்கள் ஏற்கனவே முகங்கொடுத்திருக்கும் தாங்கமுடியாத சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் செயற்படுவது குறித்து மிகுந்த கவலையடைகிறோம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் இயற்றப்பட்டிருக்கும் புதிய சட்டம், தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான சட்டங்களை இயற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியின் தொடர்ச்சியான பாரம்பரியமாகும். இது நுண்நிதிக்கடன் வலையின் அடிப்படைக் காரணங்களைத் தவிர்த்து செல்கிறது. அத்தோடு பெண் கடன்பெறுனர்களுக்கான கடன் நீதியைப் புறக்கணிக்கிறது.

இச்சட்டம் குடும்பக்கடன் மற்றும் பொதுக்கடன் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளைப் புரிந்துகொள்ளத் தவறுகிறது. அதுமாத்திரமன்றி புதிய அதிகாரசபையில் பெண்களின் சமனான பிரதிநிதித்துவத்தைக் கட்டாயமாக்குவதிலும் இச்சட்டம் தோல்வியடைந்துள்ளது. கடன்பெறும் பெண்களின் பிரதிநிதிகளும், அவர்களால் நிர்வகிக்கப்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்த ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பில் உள்வாங்கப்படவில்லை என்றால், அவர்களது வாழ்வியல் அனுபவங்களை அதன் உறுப்பினர்கள் எவ்வாறு அறிந்துகொள்வர்? வாழ்வை முன்கொண்டுசெல்வதில் பெண்கள் வழங்கும் ஊதியமில்லா மற்றும் ஊதியத்துடன்கூடிய பங்களிப்புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் எவ்வாறு தீர்மானங்களை மேற்கொள்வர்?

கடன் வழங்கல் செயன்முறையில் துன்புறுத்துபவர்களையும், குழப்பக்காரர்களையும் ஒழுங்குபடுத்தவேண்டிய சட்ட மீளுருவாக்கமானது, அதனைவிடுத்து சமூக மட்டத்தில் இயங்கிவரும் கடன்வழங்கல் கட்டமைப்புக்களான மரண ஆதார சங்கம், விவசாய அங்கங்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பெண்களின் கூட்டமைப்புக்கள் என்பவற்றை அழிப்பதற்கு வழிகோலுகிறது. நலிவுற்ற தொழிலாளர் வர்க்கப் பெண்களுக்கு ஒரு உதவுகரமாகவும், தீங்கு விளைவிக்கும் கடன் வசூலித்தல் நடைமுறைகளிலிருந்து பாதுகாப்பு அரணாகவும் இயங்கிய அவ்வமைப்புக்களை இந்தச் சட்டம் சிதைக்கிறது என அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.