மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய 19 முதலீட்டாளர்கள் விருப்பம் விரைவில் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பமென பிரதியமைச்சர் தெரிவிப்பு!

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் முதலீடு செய்வதற்கு 19 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடிதுவக்கு தெரிவிக்கையில்,

மத்தள விமான நிலையம் தொடர்பான முதலீட்டு முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று வெள்ளிக்கிழமை  நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக, தெரிவு செய்யப்படும் முதலீட்டாளர்கள் மிக விரைவில் மத்தள விமான நிலையத்தின் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிப்பார்கள் என்று எதிர்பார்ப்பார்க்கப்படுகின்றது.

பொது-தனியார் பங்களிப்பு மாதிரியின் கீழ், இந்த விமான நிலையத்தின் வளங்களைப் பயன்படுத்தி வணிக மற்றும் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

உலகின் வெறிச்சோடிய விமான நிலையம்’ என்ற பின்னணி: அம்பாந்தோட்டை மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக மத்தள விமான நிலையம் 2013 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

எனினும், ஆரம்பம் முதலே போதிய விமான சேவைகளோ, பயணிகளோ இல்லாத காரணத்தினால் இது சர்வதேச ஊடகங்களால் ‘உலகின் மிக வெறிச்சோடிய விமான நிலையம் என்று விமர்சிக்கப்பட்டது.

இந்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அதன் வருடாந்த செயற்பாட்டுச் செலவு காரணமாக, வருடத்திற்கு சுமார் 3 பில்லியன் ரூபா வரை நட்டத்தை ஏற்படுத்தி வந்துள்ளது.

குறிப்பாக 2025 ஆம் ஆண்டில் இந்த விமான நிலையத்தின் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. கடந்த ஆண்டில் மாத்திரம் 703 சர்வதேச விமானங்கள் இங்கு தரையிறங்கியதுடன், 140,614 பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.