மாத இறுதியில் வருகைதரவுள்ள நாணய நிதிய பிரதிநிதிகள் குழு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு உத்தேசித்துள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் ஆறாவது தவணை நிதியை விடுவிப்பதற்கு முன்னதாக மேற்கொள்ளப்படவேண்டிய 5 ஆம் கட்ட மீளாய்வு நடவடிக்கைகளில்  இக்குழுவினர் ஈடுபடுவர் என தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் சர்வதேச நாணய நிதியம் இதுவரையில் ஐந்து தவணை நிதியை இலங்கைக்கு விடுவித்துள்ளது.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட விஜயத்தின்போது நாட்டின் பொருளாதாரச் செயற்திறன் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படும்.

அதேவேளை இம்மீளாய்வைத்  தொடர்ந்து ஆறாவது தவணை நிதியை விடுவிப்பது தொடர்பான அவசியமான உடன்படிக்கைகள் எட்டப்படும் என்று கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்