வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர் அழுத்தத்தையடுத்து முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பு பிரிவிற்குட்பட்ட வீரசிங்கம் அணைக்கட்டின் கட்டுமானப்பணிகள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இவ்வாறு தமது தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து கட்டுமானப்பணிகள் முழுமைப்படுத்தப்பட்ட வீரசிங்கம் அணைக்கட்டினை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உலகவங்கியின் நிதி உதவியில் ‘சியாப்’ நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின்கீழ் காணப்படும் வீரசிங்கம், சித்தாறு, சிவசாமி அணைக்கட்டுக்கள் மற்றும் மல்லிகைத்தீவு கமக்கார அமைப்புப் பிரிவிற்குட்பட்ட ஜங்கன் அணைக்கட்டு ஆகிய அணைக்கட்டுக்களை அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் தாம் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையீடு செய்திருந்தனர்.
இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டிற்கு அமைவாக குறித்த அணைக்கட்டுக்களை அமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் கடந்த 27.01.2026இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட கமநல உதவி ஆணையாளரிடம் கேள்வி எழுப்பியதுடதுடன், விரைவாக அணைக்கட்டுக்களின் கட்டுமானப்பணிகளைப் பூர்த்திசெய்யுமாறும் வலியுறுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 26.03.2026 அன்று முல்லைத்தீவு மாவட்ட கமநல உதவி ஆணையாளரை நேரில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த அணைக்கட்டுக்களின் கட்டுமானப்பணிகளை விரைவாக பூர்த்திசெய்யுமாறு மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.
இதன்போது சிவசாமி அணைக்கட்டின் கட்டுமானப்பணிகள் பூத்தியாகியுள்ளதாகவும், வீரசிங்கம், சித்தாறு அணைக்கட்டுகளின் பணிகள் ஒரு வாரத்திற்குள் பூர்த்திசெய்யப்படுமெனவும், ஜங்கன் அணைக்கட்டின் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்படுமெனவும் முல்லைத்தீவு மாவட்ட கமநல உதவி ஆணையாளர் பதிலளித்திருந்தார்.
இத்தகைய சூழலில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து வீரசிங்கம் அணைக்கட்டின் கட்டுமானப் பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இவ்வாறு பூத்திசெய்யப்பட்டுள்ள வீரசிங்கம் அணைக்கட்டை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறிப்பாக புதுக்குடியிருப்பு கமக்கார அமைப்பு பிரிவில் 400ற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்குரிய 1087ஏக்கர்வரையிலான வயல் நிலங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 450ஏக்கர் வரையிலான வயல்நிலங்களுக்கு வீரசிங்கம் அணைக்கட்டிலிருந்தே நீர்ப்பாசனம் செய்யப்பட்டுவருகின்றது.
அந்தவகையில் கடந்த காலத்தில் ஒவ்வொருவருடமும் சிறுபோக நெற்செய்கைக் காலத்தில் விவசாயிகளால் ஆறு இலட்சம்ரூபாய் வரையில் செலவிடப்பட்டு தற்காலிக மண் அணைக்கட்டு அமைக்கப்பட்டே நீர்ப்பாசனம் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு ஒவ்வொருவருடமும் பாரிய நிதிச் செலவில் அமைக்கப்படுகின்ற குறித்த தற்காலிக மண்ணைக்கட்டு வெள்ளப்பெருக்கு அபாயத்தைத் தவிர்க்கும் நோக்கில் பெரும்போக காலத்தில் அகற்றப்பட்டும் வந்துள்ளது.
இவ்வாறாக விவசாயிகள் தமது நெற்செய்கைக்கு நீர்ப்பாசனஞ் செய்வதில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவந்தனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களின் தொடர்ச்சியான வலியுறுத்தலுக்கமைய குறித்த அணைக்கட்டு விரைவாக அமைக்கப்பட்டதன்மூலம் தாம் எதிர்நோக்கி வந்த நீர்ப்பாசன நெருக்கடிக்கு தீர்வு கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அப்பகுதி விவசாயிகள், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமது வலியுறுத்தலையேற்று குறித்த அணைக்கட்டின் கட்டுமானப்பணிகளை துரிதமாக பூத்திசெய்தமைக்கு முல்லைத்தீவு மாவட்ட கமநல உதவி ஆணையாளர் மற்றும் புதுக்குடியிருப்பு கமநலசேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





