முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் ஆரம்பமானது நாவிதன்வெளி பிரதேச சபை அமர்வு

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையின்போது உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து, நாவிதன்வெளி பிரதேச சபையில்  இன்று புதன்கிழமை (13) உணர்வுபூர்வமான நினைவேந்தல் மௌன அஞ்சலியுடன்  அனுஷ்டிக்கப்பட்டது.

நாவிதன்வெளி பிரதேச சபையின் 11-வது மாதாந்த அமர்வு தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் காலை 9.30 மணியளவில் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

மே 18ஆம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, அங்கு உயிரிழந்த உறவுகளுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து சபையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

கூட்டத்தின்போது சபை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்குப் பதிலளித்த தவிசாளர், பிரதேசத்தின் கல்வி மேம்பாடு குறித்து பேசுகையில்,

“எமது பிரதேசத்தில் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சன சமூக நிலையங்கள் ஊடாக நூலகங்கள் புனர்நிர்மாணம் செய்யப்படவேண்டும். அவை இடைநிறுத்தப்படாமல் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்யவேண்டும். இந்தத் திட்டத்திற்கு தன்னார்வலர்கள் சேவை மனப்பாங்குடன் முன்வந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என தெரிவித்தார்.