மெகசின் சிறையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இருவர் கைது

மெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (08) நண்பகல் பேஸ்லைன் வீதியில் அமைந்துள்ள மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சுவருக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப் பகுதியிலிருந்து சிறைச்சாலைக்குள் 02 பொதிகளை வீசுவதற்கு அவர்கள் முயன்ற போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்த 02 பொதிகளையும் பரிசோதித்த போது, 22 கிராம் 250 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், 02 மில்லிகிராம் ‘ஹேஷ்’ போதைப்பொருள், 02 தொலைபேசி சார்ஜர்கள், 02 ஜோடி காதணிகள், 10 லைட்டர்கள் மற்றும் 02 சிறிய ரக கைப்பேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் 29 வயதுடைய கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Geographic Reference

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாளை (09) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.