மொனராகலை பாடசாலையின் ஆடை விதிமுறை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

மொனராகலை மாவட்ட அரசப் பாடசாலை ஒன்றில் பணிபுரியும் ஆசிரியைகள் வெள்ளை நிறச் சேலை அணிவதை கட்டாயமாக்கியுள்ள புதிய உத்தரவை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,

இத்தகைய நடவடிக்கை ஆசிரியைகளுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், குறித்த விதிமுறைக்கு எதிராக அதிருப்தி நிலவுவதாகவும் தெரிவித்தார்.

ஆசிரியர்களின் ஆடைத்தெரிவு தொடர்பாக கல்வி அமைச்சு ஏற்கனவே எழுத்துப்பூர்வமான தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள நிலையில், தனிப்பட்ட ஒரு பாடசாலை தன்னிச்சையாக இவ்வாறான விதிமுறைகளை அமுல்படுத்துவது முற்றிலும் பொருத்தமற்றதும் தவறானதுமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இதனால் ஏற்படும் சிரமங்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும், தொடர்ந்து ஆசிரியைகளை வெள்ளைச் சேலை அணியக் கட்டாயப்படுத்துவது ஏற்க முடியாதது எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த பிரச்சினையில் கல்வி அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். இல்லையெனில், இலங்கை ஆசிரியர் சங்கம் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.