எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டும் கையிருப்பை முகாமைத்துவம் செய்வதற்காக அரச நிறுவனங்களுக்கு வெளியிட்ட வழிகாட்டல்களை கட்டாயம் பின்பற்றவேண்டும். முன்னேற்ற அறிக்கை உரிய தரப்பினரிடமிருந்து கோரப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் நிலைமை ஆரம்பமானவுடன் தோற்றம் பெறக்கூடிய நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டங்களிலும், அமைச்சுக்களின் கூட்டங்களிலும் பல தீர்மானங்கள் எட்டப்பட்டன.
மார்ச் 17ஆம் திகதி பல தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் விசேட சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டும் கையிருப்பை முகாமைத்துவம் செய்வதற்காக அரச நிறுவனங்களுக்கு வெளியிட்ட வழிகாட்டல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முன்னேற்ற அறிக்கை உரிய தரப்பினரிடமிருந்து கோரப்படும்.
மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமை நாளை எவ்வாறு இருக்கும் என்று எம்மால் குறிப்பிட முடியாது.நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் முறையாக செயற்படுத்தப்பட வேண்டும் அதன் பொறுப்பு அரச நிறுவனங்களுக்கு உண்டு.
பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பண்டங்களின் விலைகள் தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை விசேட கவனம் செலுத்த வேண்டும். அதற்கான அதிகாரம் எமக்கு இல்லை என்றார்.





