வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பரித்திச்சேனை சந்தியில் சைக்கிள் ஒன்றின் மீது விசேட அதிரடிப்படையின் ஜீப் வண்டி மோதியதில் சைக்கிளில் பயணித்த 67 வயது முதியவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அத்துடன் இந்த விபத்து தொடர்பில் விசேட அதிரடிப்படையின் ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சனிக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கன்னங்குடா புதுமண்டபத்தடியைச் சேர்ந்த 67 வயதுடைய முதியவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கல்லடி விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுணதீவு தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாமிற்கு சனிக்கிழமை இரவு ஜீப் வண்டி சென்றுகொண்டிருந்தபோது பிரித்திச்சேனை சந்தியில் எதிரே வந்த சைக்கிளின் மீது மோதியதில், குறித்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப்படையின் ஜீப் வண்டியை செலுத்திய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் வவுணதீவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.




