வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுக்கட்டிடங்களை சுத்தப் படுத்துவதற்கும் கொடுப்பனவுகளை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
கிண்ணியா சோலைவெட்டுவான் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செவ்வாய்க்கிழமை (10) உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
வெள்ள அனர்த்தித்தின் பாதிப்பில் இருந்து மீள அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது பாதிக்கப்பட்டோருக்கு சற்று நிம்மதியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு வழங்கப்படும் நடைமுறையில் நெகிழ்வு தன்மைகள் பேணப்பட வேண்டியுள்ளது. சில வரையரைகளால் அரச அதிகாரிகள் குறிப்பாக கிராம உத்தியோகத்த ர்கள் அரசுக்கும் மக்களுக்கும் இடையில் பணிசெய்வதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
அதுபோன்று வீடுகளை சுத்தம் செய்ய வழங்கப்படும் கொடுப்பனவு பாதிக்கப்பட்ட மதத் தளங்கள், முன்பள்ளிகள், கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றுக்கும் வழங்கப்பட வேண்டும். இது குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.




