வெள்ளவத்தை, பாமன்கடை பகுதிகளில் 7 மணி நேர நீர் வெட்டு

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (06) வியாழக்கிழமை இரவு 10.00 மணி முதல் நாளை (07) வெள்ளிக்கிழமை காலை 5.00 மணி வரை 7 மணித்தியாலங்களுக்கு வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை மேம்படுத்தும் முதலீட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டத்தின் அத்தியாவசிய மேம்பாட்டுப் பணிகளுக்காகவே இந்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படுவதாக அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடைப் பகுதி மக்கள் தேவையான நீரை முன்னதாகவே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், இருக்கும் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொள்கிறது.