வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் சிறுவன் உட்பட ஐவர் உயிரிழப்பு!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்ற விபத்துக்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிலியந்தலை பகுதியில் நேற்று மாலை லொறி ஒன்று வீதியை கடக்கமுற்பட்ட ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் பாதசாரி  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவர் என தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அத்துருகிரிய பகுதியில் நேற்று மாலை அதிவேக நெடுஞ்சாலை மேம்பால வீதியில் பயணித்த லொறி ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்குரணை – நீருல்ல வீதியில் பயணித்த லொறி ஒன்று, பின்னோக்கி நகர்ந்து பின்னால் வந்த வேன், முச்சக்கரவண்டி மற்றும் இரு லொறிகளுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவர் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை வீதியின் நெடுங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புத்துறை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் பயணித்த  யுவதி ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 24 வயதுடைய இளைஞர் ஒருவரும் 19 வயதுடைய யுவதி ஒருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துடன் தொடர்புடைய ட்ராக்டர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.