2026இல் நடைபெறவுள்ள பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் முக்கிய அறிவிப்பு

2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சை ஆகிய பரீட்சைகள் முன்னதாக அறிவிக்கப்பட்ட திகதிகளில் நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானதைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு வேளையின்போது 2026ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணை தொடர்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே அறிவிக்கப்பட்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார். அதன்படி, பரீட்சைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட குறித்த திகதிகளில் நடைபெறவிருக்கும் பரீட்சைகளுக்கு தயாராகுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் பரீட்சை அட்டவணைகளில் அடிக்கடி செய்யப்பட்ட மாற்றங்கள் மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், அறிவிக்கப்பட்ட பரீட்சை அட்டவணையை, இந்த ஆண்டில் அதிகாரிகள் கட்டாயமாக பின்பற்ற எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் 2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

மேலும், விடைத்தாள் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டப் பணிகள் இன்று (ஏப்ரல் 1) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூன்றாம் கட்டப் பணிகள் ஏப்ரல் 30ஆம் திகதி முதல் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.