21வது ஆசிய ஊடக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாளை செவ்வாய்க்கிழமை (12) மாலைதீவுக்குப் புறப்படவுள்ளார்.
மாலைதீவில் உள்ள வில்லா நௌட்டிக்காவில் இன்று திங்கட்கிழமை (11) ஆரம்பமாகும் 21வது ஆசிய ஊடக மாநாட்டு 14ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ செவ்வாய்க்கிழமை (12) இலங்கையில் இருந்து புறப்படவுள்ளார்.
இதில் பல்வேறு ஆசிய நாடுகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், ஊடக உரிமையாளர்கள், ஊடக வல்லுநர்கள், தகவல் தொடர்பு ஆராய்ச்சியாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் பலர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலைதீவு அரசாங்கப் பிரதிநிதிகள் மட்டுமின்றி, வங்கதேசத்தின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர், பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச்செயலாளர், சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர், திமோர்-லெஸ்டேயின் சமூகத் தொடர்புக்கான அரச செயலாளர் மற்றும் ஆசியப் பிராந்திய நாடுகளைச் சேர்ந்த பல துறைத் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த மாநாட்டின் நான்காவது அமர்வில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ , ஊடகக் கொள்கை, ஊடகத் தொழில்சார் மற்றும் பொது நலனுக்கான தகவல் தொடர்புப் பொறுப்புகள் ஆகிய விடயங்கள் குறித்து முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.




