புத்தளம் – தலவில கரையோரப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 468 கிலோ கிராம் பீடி இலைகளை கடற்படையினர் அதிரடியாகப் கைப்பற்றியுள்ளனர். கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளன.
வடமேற்கு கடற்படை அதிகாரிகள், 26ஆம் திகதி இரவு புத்தளம் எரம்புகொடெல்ல கரையோரப் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர்.
இதன்போது, கடற்கரை ஓரமாக சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட 15 பொதிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்தப் பொதிகளிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட 468 கிலோகிராம் பீடி இலைகள் கண்டெடுக்கப்பட்டன.
கடற்படையினரின் தீவிர ரோந்து நடவடிக்கையினைத் தொடர்ந்து, கடத்தல்காரர்கள் இந்தப் பொதிகளை கடற்கரையில் கைவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் அனைத்தும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தப்பியோடிய சந்தேக நபர்களைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




