தமிழ்பேசும் ம்களின் நலன்களை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை கடந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்த 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (4) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ்பேசும் கட்சிகளும் தமது சுயாதீனத்தவத்தையும் கொள்கைகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும் பேணிக்கொண்டு, பொது இணக்கப்பாடு எட்டப்படும் விடயங்களில் தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டிருந்தன.
அதன் நீட்சியாக, அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்ததன் பிரகாரம் நாளைய தினம் (3) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவையும் மாலை எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து மேற்படி 6 தமிழ்பேசும் கட்சிகளினதும் பிரதிநிதிகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பி.ப 4.00 மணிக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து, தமது நோக்கம் மற்றும் தாம் விசேட அவதானம் செலுத்தியுள்ள விடயங்கள் பற்றி விரிவாக விளக்கமளிக்கவுள்ளனர்.





