அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறை அதிகாரிகளை தமிழக அரசு காப்பாற்ற முயற்சிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான விசாரணையின் தற்போதைய நிலை குறித்து இன்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் புகார் அளிக்கச் சென்ற சிறுமியின் பெற்றோரை அனைத்து மகளிர் காவல்நிலைய பெண் ஆய்வாளர் உள்ளிட்டோர் தாக்கிய சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.
இதேபோல், பாதிக்கப்பட்ட தங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சிறுமியின் தாயாரும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் போக்சோ விதிகளை மீறிய காவல்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில், சம்பந்தப்பட்ட பெண் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், “குற்ற வழக்குப்பதிவு செய்வது என்பது வேறு. துறை ரீதியிலான நடவடிக்கை என்பது வேறு.
நீங்கள் எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்” என்றனர். அதற்கு அரசு தரப்பில், “இந்த வழக்கில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக கடந்த 2024-ம் ஆண்டே துறை ரீதியிலாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், புகார் அளிக்க வந்த சிறுமியின் பெற்றோரை, போலீஸாரே தாக்கியது என்பது ஏற்புடையதல்ல.
இந்த வழக்கில் போலீஸார் போக்சோ விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளனர். அவர்களை இடைநீக்கம் செய்வது மட்டுமே தண்டனை கிடையாது. இந்த வழக்கில் அவர்களை தமிழக அரசு காப்பாற்ற முயற்சிப்பது ஏன் என தெரியவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட துறை ரீதியிலான விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அரசு தரப்பில் நாளை (இன்று) அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.




