ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி: தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கைது

மத்திய பாஜக அரசைக் கண் டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிர ஸாரை போலீஸார் கைது செய்தனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத் தில் காந்தியின் பெயரை நீக்கி, அந்த சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதாகக் குற்றம்சாட்டி, மத்திய அரசை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று நடைபெற்றது.

தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோதி பொன்னம்பலம் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்தும், தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து பனகல் மாளிகையில் இருந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் புறப்பட்ட காங்கிரஸாரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: மத்திய பாஜக அரசு ஜிஎஸ்டி நிதியைச்சரியான முறையில் மாநிலங்களுக்கு வழங்குவதில்லை. பேரிடர் காலங்களில் உரிய நிதி அளிப்பதில்லை. 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை மூலம் பாஜக ஆளாத மாநிலங்களைப் பழிவாங்க மத்திய அரசு முயல்கிறது. இதை கண்டித்தே போராட்டம் நடத்துகிறோம்.

தமிழகத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைத் தொகையைத் தடுக்க பாஜகவும், அதிமுகவும் சதி செய்து நீதிமன்றத்தை நாட திட்டமிட்டிருக்கிறார்கள். அதை முறியடிக்க வேண்டும் என்பதற்காகவே முன்கூட்டியே மகளிர் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கி இருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

இப்போராட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், இமையா கக்கன், மாவட்டத் தலைவர்கள் டில்லி பாபு, ஆர்.எஸ்.செந்தில், கராத்தே செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.