திமுக எங்களுக்கு 25 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளது. ஆனால், அது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எங்களது தேவையை அவர்களிடம் தெளிவாகத் தெரிவித்துள்ளோம்” என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தொகுதிப் பங்கீடு தொடர்பாக எங்களது குழுவினரும், திமுக குழுவினரும் சுமார் ஒரு மணி நேரம் விரிவாக ஆலோசனைகளை நடத்தினோம். நாங்கள் சமர்ப்பித்த விருப்பப் பட்டியலை திமுக ஏற்கும் என்று நம்புகிறோம். அவர்கள் எங்களுக்கு 25 தொகுதிகளை ஒதுக்க முன்வந்தார்கள், ஆனால் அது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எங்களது தேவையை அவர்களிடம் தெளிவாகத் தெரிவித்துள்ளோம்.
தவெக ஒரு புதிய கட்சி. அவர்களை நாம் குறைத்து மதிப்பிடமுடியாது. இளைஞர்களிடையே அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல தமிழகத்தில் காங்கிரஸின் வலிமையையும், எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் செல்வாக்கையும் அவர்களும் அங்கீகரித்து வருகிறார்கள்.
தற்போதைய நிலையில் திமுக-வுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தத்தேர்தலில் எங்களுக்கு என்னவேண்டும் என்பது குறித்த விருப்பப் பட்டியலை ஏற்கெனவே அவர்களிடம் சமர்ப்பித்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.





