கொசுத் தொல்லை மற்றும் கழிவு நீர் தேக்கம் தொடர்பாக புகார்கள் வந்தால் 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகரித்து வருவதாகவும், கழிவுநீர் தேக்கத்துக்கு சரியான தீர்வு காணப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டி கோட்டூர்புரத்தைச் சேர்ந்த விஜயராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், “சென்னை மாநகரில் பாரபட்சமில்லாமல் கொசுக்களின் பெருக்கம் அனைத்து பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது. கொசுக்கடியால் டெங்கு,
மலேரியா, சிக்கன் குன்யா போன்ற தொற்று நோய்கள் வேகமாகப் பரவி வருகின்றன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட விரிவாக்கப் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. மழைநீர் வடிகால்களும் முறையாக அமைக்கப்படவில்லை.
பெரும்பாலான குளம், குட்டைகள், மழைநீர் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் உருமாறியுள்ளது. கழிவுநீர் தேக்கத்தால் கொசு உற்பத்தியும் பன்மடங்கு அதிகரித்து வருகிறது.
எனவே கொசுத் தொல்லையை கட்டுப்படுத்தி, கழிவுநீர் தேக்கத்தை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் காணாமல் போன நீர்நிலைகளை மீட்டு எடுத்து கழிவுநீர் மேலாண்மையை முறையாக செய்யவும், குறிப்பாக தெருக்களில், சாலைகளில் கழிவுநீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ளவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், “கொசுத் தொல்லை மற்றும் கழிவுநீர் தேக்கம் தொடர்பான பிரச்சினைகள் சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ளது.
எனவே கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த தமிழக அரசு 4 வார காலத்துக்குள் விரிவான ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட வேண்டும். கட்டுமானப் பகுதிகளில் தண்ணீர் மற்றும் கழிவுநீர் தேங்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேசுகாதார விதிகளை மீறும் நிறுவனங்களுக்கும், நபர்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும். கொசுத் தொல்லை தொடர்பாக புகார் அளிக்க ஏதுவாக இலவச உதவி எண்ணை அறிமுகம் செய்ய வேண்டும்.
குறிப்பாக இது தொடர்பாக புகார்கள் வந்தால் அந்த புகார்கள் மீது 48 மணிநேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.





