சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள்: தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் சென்னை டிஇஓ ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் (டிஇஓ) ஜெ.குமரகுருபரன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தி கண்காணிக்க தேர்தல் இணைப்புப் பொறுப்பாளர்கள் (Nodal Officers) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, வீடியோ கண்காணிப்புக் குழு மற்றும் வீடியோ பார்வையிடும் குழு ஆகியவற்றின் மூலம் சென்னை மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களில் நாளொன்றுக்கு தலா 3 குழுக்கள் வீதம் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.