சிட்கோ நிலத்தை அபகரித்ததாக வழக்கு: மா.சுப்பிரமணியன், அவரது மனைவிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு

அரசுக்குச் சொந்தமான சிட்கோ நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்ததாக பதியப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு சிட்கோ சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை, திமுக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயராகப் பதவி வகித்தபோது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலமாக தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சிபிசிஐடி வழக்குப்பதிவு: இதுதொடர்பாக சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இதுதொடர்பாக மா.சுப்பிர மணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மீது கூட்டுச்சதி, மோசடி மற்றும் ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள எம்.பி,எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு தள்ளுபடி செய்தது.

குற்றச்சாட்டுக்கு மறுப்பு: இந்நிலையில் இந்த வழக்கு குற்றச்சாட்டு பதிவுக்காக சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி.சஞ்சய் பாபா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரதுமனைவி காஞ்சனா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நீதிபதி வாசித்தார். அதற்கு மா.சுப்பிரமணியனும், அவரது மனைவியும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும், அவற்றைமறுப்பதாகவும் தெரிவித் தனர்.

அதையடுத்து இருவர் மீதான குற்றச்சாட்டு களையும் பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கை சாட்சி விசாரணைக்காக ஆக.31-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.