செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றும் உறிஞ்சிக்குழிகள் பராமரிப்பின்றி பாழானதோடு, புதர்மண்டி உள்ளது. சரியாக பராமரிக்காமல் விட்டதால் அவை அமைத்ததன் நோக்கம் சிதைந்து வருகிறது.
மாவட்ட ஆட்சியர் இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண கோரிக்கை எழுந்துள்ளது. 2021-22ம் நிதியாண்டில் அனைத்து கிராமங்களையும் சுகாதாரத்தில் முன்மாதிரியாக மாற்ற 15வது நிதிக்குழுமத்தில் 30 சதவீத நிதி சுகாதாரத்திற்காகவே ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஊராட்சிகளில் கால்வாய் மூலம் வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்க உறிஞ்சிக்குழி அமைத்து நன்னீராக்க திட்டமிடப்பட்டது. இதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் உறிஞ்சிக்குழிகள் அமைக்கப்பட்டன.
பார்ப்பதற்கு கால்நடை குடிநீர் தொட்டிகளைப் போன்று இருக்கும் இவை, ஊரின் எல்லையிலோ அல்லது தெருவின் கடைசி பகுதியிலோ அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த கிடைமட்ட உறிஞ்சிக்குழியில் முதல் அடுக்கில் ஜல்லி கற்கள், 2-வது அடுக்கில் கிராவல், மூன்றாவது அடுக்கில் கரி, 4-வது அடுக்கில் மணல், மீண்டும் அடுக்கில் அமைத்து போல் ஜல்லி அமைக்க வேண்டும்.
இந்த சுத்திகரிப்பு முறையால் முதல் அடுக்கில் நுழையும் கழிவுநீர் மண் துகள்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. 2-வது அடுக்கான கிராவலில் இருந்து வெளியேறும் போது கருமை நிறம் குறைகிறது.
3-வது அடுக்கான கரியில் இருந்து சுத்திகரிக்கப்படுவதால் நீர் தூய்மை அடைகிறது. இறுதியாக வெளியேறும் போது தெளிந்த நீராகும். இத்திட்டம் செங்கை மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் தற்போது செயல்படாமல் முடங்கி கிடக்கிறது.
அமைத்த நாள் முதல் இதை பராமரிக்க உள்ளாட்சிகள் கண்டு கொள்ளவே இல்லை. கால்வாய்கள் உறிஞ்சிக்குழியோடு இணையுமிடத்தை வாரம் ஒரு முறை சுத்தம் செயய வேண்டும்.
அதையும் செய்யவில்லை. இதனால் அமைக்கப்பட்ட உறிஞ்சிக்குழிகள் செயல்படாமல் புதர்மண்டி கிடக்கின்றன. இத்திட்டம் மண்வளம், நீர்வளத்தை பாதுகாக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி, சிதிலமாகி வருகிறது.
ஆனால் சீரமைப்பு செய்வதாக சிறிய தொகை செலவு செய்து பெரிய தொகையை செலவு செய்தது போல் கணக்கு காண்பிக்கப்பட்டு வருகிறது. இதில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வண்டலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் குமரன் கூறியது: கிராமங்களில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நேரடியாக ஏரியில் கலப்பதை தடுப்பதற்காக உறிஞ்சி குழிகள் அமைக்கப்பட்டது. சிறப்பான திட்டம் என்றாலும் ஊராட்சி நிர்வாகங்கள் இதனை சரிவர பராமரிக்கவில்லை.





