திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி டிச.13-ல் உண்ணாவிரதம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் டிச.13ல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பிரபு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் முருகன் கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது. 1926-ல் உரிமையியல் பிரச்சினை எழும் வரை தீபத்தூணில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது. அதன்படியே இந்த ஆண்டு தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

உயர் நீதிமன்ற உத்தரவுபடி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி அனுமதி வழங்க காவல்துறை மறுத்துவிட்டது.

எனவே டிச.13-ல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், மனுதாரர் கோரும் இடத்திற்கு பதிலாக மாற்று இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.

பின்னர் நீதிபதி, மனுதாரர் கோரும் இடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாம். 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அதை விட அதிகமான ஆட்கள் பங்கேற்கக்கூடாது. உண்ணாவிரதப் போராட்டத்தில் தனி நபர்களையோ, அரசியல் கட்சியினரையோ தாக்கும் வகையில் பேசக்கூடாது என உத்தரவிட்டார்.