திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் இடத்தை மாற்றுவது தொடர்பாக ஏன் பரிசீலிக்கக் கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிடும்போது, “தீபம் ஏற்றுவதை தனிப்பட்டஉரிமையாக கோர முடியாது.
மத நல்லிணக்கம், பொது அமைதியைக் கருத்தில் கொள்ள வேண்டும். 102 ஆண்டுகளுக்கு முந்தைய உரிமையியல் நீதிமன்ற உத்தரவு, பிரிவி கவுன்சில் உத்தரவு, நீதிபதி கனகராஜின் உத்தரவு ஆகியவை பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபமேற்றுவதை உறுதி செய்கின்றன.
தனி நீதிபதி உத்தரவில் ராமஜென்ம பூமி வழக்கை மேற்கோள் காட்டியுள்ளார். அந்த உத்தரவு இவ்வழக்கில் பின்பற்றப்பட்டால், மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்தையே நாட உத்தரவிட்டிருக்க வேண்டும்.
எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்றார். அப்போது நீதிபதிகள் “இந்த விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும். நீதிபதி கனகராஜின் உத்தரவின் அடிப்படையில் தீபம் ஏற்றும் இடத்தை மாற்றுவது தொடர்பாக பரிசீலிக்குமாறு அளிக்கப்பட்ட மனுவைப் பரிசீலித்திருக்கலாம். அதை ஏன் செய்வில்லை?” என்றனர்.
கோயில் செயல் அலுவலர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி “மலையில் 8 அடி உயரம், ஒரு அடி அகலம் கொண்ட கிரானைட் தூண்தான் உள்ளது. மேலும், அது பிரிட்டிஷ் காலத்தில் மலைகளை அளப்பதற்காக பயன்படுத்தப்பட்ட சர்வே தூண்” என்றார்.
நீதிபதிகள் “அனைவருக்கும் தெரியும் வகையில் அந்த தூணில் முன்பு தீபம் ஏற்றப்பட்டிருக்கலாமே? அது கோயில் பகுதியில் அமைந்துள்ளதால், அது ஏன் தீபத்தூணாக இருக்க முடியாது” என்றனர். செயல் அலுவலர் தரப்பில் “அந்த தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் “தீபம் ஏற்றும் இடத்தை மாற்றுவது குறித்து தேவஸ்தானம் முடிவு செய்ய வேண்டும்” என்றார். பின்னர் நீதிபதிகள், “தீபம் ஏற்றும் இடத்தை மாற்றுவது தொடர்பாக தேவஸ்தானம் பரிசீலிக்கலாம் என தனி நீதிபதி கூறியுள்ளார். இந்தக் கோரிக்கையை ஏன் பரிசீலிக்கக்கூடாது.
தீபம் ஏற்றுவதில் பிரச்சினை இல்லை, எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பதில்தான் பிரச்சினை. பிற மனுதாரர்கள், எதிர்மனுதாரர்களின் வாதங்களுக்காக விசாரணை டிச. 15-க்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்றனர்.
அப்போது மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பில், “தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று கோரினர். அதை ஏற்க மறுத்து” அனைத்து தரப்பு வாதங்கள் முடியட்டும், உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று தெரிவித்தனர்.





