தமிழகம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள அரசு மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதை நிறுத்தியுள்ளனர்.
‘முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்து, அரசு மருத்துவர்களுக்கான திருத்தப்பட்ட ஊதியம், 20 ஆண்டுகள் கடந்த மூத்த முதுநிலை மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு படிகள் ரூ.3,000 வழங்குவது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவ பணியிடங்களை உருவாக்குவது’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இதற்காக, பல்வேறு சங்கங்கள் ஒருங்கிணைந்து, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்கி, சுகாதாரத் துறை அமைச்சர், செயலருடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 20 ஆயிரம் மருத்துவர்கள் கடந்த 12-ம் தேதி முதல் கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து பணியாற்றினர்.
அடுத்த கட்டமாக 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதை அரசு மருத்துவர்கள் தற்போது நிறுத்தியுள்ளனர்.




