‘பூர்ணசந்திரன் இறந்ததற்கு தமிழக அரசே காரணம்’ – அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு

பூர்ணசந்திரன் தீக்குளித்து இறந்ததற்கு தமிழக அரசே காரணம் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்றும் உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக் கோரி, மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ணசந்திரன் நேற்று முன்தினம் தல்லாகுளம் புறக்காவல் நிலை யத்தில் தீக்குளித்து உயிரிழந்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் இருந்த அவரது உடலுக்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏவும், மருத்துவர் அணி இணைச் செயலாளருமான டாக்டர் பா.சரவணன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர் களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் சரவணன் கூறியதாவது: திருப் பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தமிழக அரசு தவறி விட்டதாக ஏற்கெனவே எங்களது பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.

அரசு முறையாக செயல்பட்டிருந்தால் பூர்ண சந்திரன் உயிரிழந்திருக்க மாட்டார். அவரது இறப்புக்கு தமிழக அரசே முழு காரணம். மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையிலும் வாக்குக்காகவும் திமுக அரசு இப்படி செயல்படுகிறது. அவரது குடும்பத்துக்கு நிதி உதவி மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறினார்.

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் திருமாறன் கூறுகையில், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கோரி உயிர் தியாகம் செய்த பூர்ண சந்திரனுக்கு இரங்கல் தெரிவிக்க மதுரையில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். உயர் நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்றி இருந்தால் இது நடத்திருக்காது.

திராவிட மாடல் அரசு இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது, என்றார். பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் முருகன் கூறுகையில், பூர்ண சந்திரன் தற்கொலை செய்து கொண்டதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார்.