மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி, திருப்புவனம் காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்கில் தனிப்படை போலீஸாரால் விசாரிக்கப்பட்டபோது, போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தார். இது தொடர்பாக தனிப்படை காவலர்கள் கண்ணன், ஆனந்த், பிரபு, ராஜா, சங்கர மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து, மதுரை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பின்னர், தனிப்படை காவல் வேன் ஓட்டுநர் ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், வழக்கு தொடர்பான கூடுதல் குற்றப் பத்திரிகையை நீதிபதி ஜோசப் ஜாய் முன்னிலையில் சிபிஐ நேற்று தாக்கல் செய்தது.
அதில், சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா உள்ளிட்ட 4 பேரின் பெயர்களும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
அஜித்குமார் கொலை வழக்கில் இதுவரை தனிப்படைக் காவலர்கள் 6 பேர் கைதாகி சிறையில் உள்ள நிலையில், அவர்களுக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.
கூடுதல் குற்றப் பத்திரிகையில் டிஎஸ்பி உட்பட 4 பேர் சேர்க்கப்பட்டிருப்பதால், அவர்களும் கைது செய்யப்படும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சித்ரவதை களுக்கு எதிரான கூட்டமைப்பின் சார்பில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் கூறும்போது, “இந்த வழக்கில் டிஎஸ்பிக்கு கட்டளையிட்டது யார்? டிஎஸ்பியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டது யார்? என்பது குறித்தான விசாரணையை சிபிஐ நடத்தி, முழு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.





