தமிழகத்தில் ஓடும் முச்சக்கர வண்டிகளுக்கு கடந்த 2013-ம் ஆண்டு மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் 13 ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தக்கோரி, ஆட்டோ தொழிற்சங்கங்கள் பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்பது தொடர்பாக முத்தரப்புபேச்சுவார்த்தை, கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் நடந்த கூட்டத்தில், போக்குவரத்து ஆணையர் பாஸ்கர பாண்டியன், தொமுச தலைவர் நடராஜன், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தில் செயல் தலைவர் பாலசுப்ரமணியம், உரிமை குரல் ஓட்டுனர் சங்க பொதுச்செயலாளர் ஜாஹிர் ஹுசேன் உட்பட 30 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தொழிற்சங்கங்கள் தரப்பில், ஆட்டோவுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.60-ல் இருந்து ரூ.70 ஆக இருக்க வேண்டுமெனவும், அடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.30 வரை கட்டணம் நிர்ணயம் செய்யவும் வலியுறுத்தினர்.
மேலும், தனியார் செயலி வாயிலாக இயக்கப்படும் வாடகை வாகனங்களை முறைப்படுத்தவும் வேண்டுகோள் விடுத்தனர். இதேபோல், நுகர்வோர் அமைப்புகளின் நிர்வாகிகள் தரப்பில், ஆட்டோவுக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைச்சர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற ஆட்டோவில் மீட்டர் பொருத்தி முதலில் இயக்க இருக்கிறோம்.
இது மக்கள் சம்பந்தப்பட்டது என்பதால் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆலோசித்து ஆட்டோ கட்டண நிர்ணயம் விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.




