தமிழகத்தில் நாளை (மார்ச் 31) முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு உள் கர்நாடகா வரை, தமிழகம் மற்றும் தெற்கு உள் கர்நாடகா வழியாக சுமார் 1.5 கிமீ உயரத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, நாளை (31-ம் தேதி), மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.
ஏப்.1, 2 தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களிலும், 3-ம் தேதி மேற்கூறிய பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். 4, 5 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழகத்தில் ஏப்.3-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாகவும் இருக்கக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக, ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளத்தில் 5 செமீ, நீலகிரி மாவட்டம் கின்னக்கோரையில் 4 செமீ, நீலகரி மாவட்டம் மேல் பவானி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஆகிய இடஙக்ளில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.





