13 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து பி.ஆர்.பாண்டியன் மேல்முறையீடு!

ஓஎன்ஜிசி வழக்கில் விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவராகவும், காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

2015-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தி்ல் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பி.ஆர்.பாண்டியன் மற்றும் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான செல்வராஜ் ஆகியோருக்கு தலா 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

அதையடுத்து பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்தும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.