பணம் தூயதாக்கல் தடைச் சட்டம் வடக்கு, கிழக்கு மக்களை பாதிக்கும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பணம் தூயதாக்கல் தடை சட்டம், நிதிசார் கொடுக்கல் வாங்களை அறிக்கையிடல் சட்டம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய சட்டம் ஆகிய சட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிவில் அமைப்புகளையும் அந்த அமைப்புகள் மூலம் உதவிகளை பெறும் மக்களையுமே பாதிப்புள்ளாக்கும். இந்த சட்டங்களில் நெகிழ்ச்சித் தன்மையை கடைப்பிடிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம்,நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பணமோசடியையும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதையும் தடுப்பதன் அவசியத்தை எந்த உறுப்பினரும் மறுப்பதில்லை. எமது நாட்டின் நிதி அமைப்பின் நம்பகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதும், நிதி நடவடிக்கை பணிக்குழு நிர்ணயித்துள்ள தரநிலைகளுக்கு இணங்கச் செயற்படுவதும் இலங்கையின் சர்வதேசக் கடமையாகும். அவற்றை நடைமுறைப்படுத்தத் தவறினால், சர்வதேச நிதி அமைப்பில் இலங்கையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும், முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறையும், வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதற்கான செலவு அதிகரிக்கும், அதன் சுமையை இறுதியில் சுமப்பது எமது மக்களே. இன்று நாம் தீர்மானிக்க வேண்டிய கேள்வியானது நிதி நடவடிக்கை பணிக்குழுவின் தரநிலைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமா வேண்டாமா என்பதல்ல. அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.Charity & Philanthropy

ஒவ்வொரு சிவில் சமூக அமைப்பையும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதுமாறு அது கூறுகிறதா? இல்லை. அனைத்து சிவில் சமூக அமைப்புகளுக்கும் பொதுவான கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அது கூறுகிறதா? இல்லை. சட்டபூர்வமாக இயங்கும் அமைப்புகளை தொடர்ச்சியான கண்காணிப்புக்கும் தேவையற்ற தலையீட்டுக்கும் உட்படுத்துமாறு அது கூறுகிறதா? இல்லை. அப்படியானால் அது என்ன கூறுகிறது?

எவ்வாறாயினும் நடவடிக்கைகள் இலக்குவைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். நடவடிக்கைகள் விகிதாசாரமானதாக இருக்க வேண்டும். நடவடிக்கைகள் ஆபத்து மதிப்பீட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

இலங்கையில் நடைபெறுவது என்ன? குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் இயங்கும் சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகள், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற அமைப்புகள் தொடர்ச்சியான கண்காணிப்புக்கும் விசாரணைக்கும் உள்ளாக்கப்படுகின்றன. அவற்றின் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் செல்கின்றனர். மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கு அழைக்கப்படுகின்றனர்.

அங்குள்ள மக்கள் வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கே சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சட்டபூர்வமாக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதியையே பெறுவதற்கு எண்ணற்ற தடைகளைச் சந்திக்கின்றனர். இது ஏன்? அவர்கள் பணமோசடியில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டதாலா? இல்லை. அவர்கள் பயங்கரவாதத்திற்கு நிதியளித்ததாக ஆதாரங்கள் இருப்பதாலா? இல்லை. அப்படியானால் ஏன்? சந்தேகம் மட்டுமே காரணம்.

அரசாங்கத்தின் சொந்த ஆபத்து மதிப்பீடே இலாபநோக்கற்ற அமைப்புகளின் பயங்கரவாத நிதியளிப்பு ஆபத்து குறைவிலிருந்து மிதமானது என்று கூறுகிறது. அவ்வாறிருக்கஇ மனித உரிமைப் பணிகளில் ஈடுபடும் அமைப்புகள் எந்தப் புறநிலை ஆதாரமும் இன்றி தொடர்ந்து அதிகமான கண்காணிப்பிற்கும் சந்தேகத்திற்கும் உள்ளாக்கப்படுகின்றன. இது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்குமுறை அல்ல. இது சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்ட நிர்வாக மனப்பான்மையாகும். இது சட்டத்தின் ஆட்சியின் வெளிப்பாடு அல்ல. இது சந்தேகத்தின் ஆட்சிக்கான வழியைத் திறக்கிறது.அதன் விளைவுகள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்துவிட்டன.

சிவில் சமூக அமைப்புகளில் பெரும்பாலானவை வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றன. பல அமைப்புகளால் வங்கிக் கணக்குகளையே திறக்க முடியவில்லை. பல திட்டங்கள் தாமதமாகின்றன. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உருவாகிறது. மனிதாபிமான உதவித் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. சட்ட உதவிகள் தடைபடுகின்றன. மனநல ஆலோசனைச் சேவைகள் பாதிக்கப்படுகின்றன.

இதனால் பாதிக்கப்படுவது அந்த அமைப்புகள் அல்ல. அந்த அமைப்புகளை நம்பி வாழும் சாதாரண மக்கள்தான். வாழ்வாதார உதவிக்காகக் காத்திருக்கும் விதவை பாதிக்கப்படுகிறார். கல்வி உதவிக்காகக் காத்திருக்கும் மாணவன் பாதிக்கப்படுகிறான். சட்ட உதவியை எதிர்பார்க்கும் பாதிக்கப்பட்ட குடிமகன் பாதிக்கப்படுகிறார். மனிதாபிமான உதவியை எதிர்நோக்கும் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.

ஆகவே, இந்தச் சட்டமூலங்களின் தாக்கம் சிவில் சமூக அமைப்புகளோடு முடிவடையாது. இவை இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கக்கூடிய சட்டங்களாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. அதையே நான் இப்போது விளக்க விரும்புகின்றேன். இந்தச் சட்டமூலங்களின் உண்மையான தாக்கத்தை நாம் வெறும் சட்டப் பிரிவுகளின் மூலமாக மட்டும் மதிப்பிட முடியாது.

அவை சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பார்த்தால்தான் அவற்றின் உண்மையான விளைவுகளைப் புரிந்துகொள்ள முடியும். பெண் தலைமையிலான குடும்பங்களுக்கும் சிறு விவசாயிகளுக்கும் நுண்கடன் வழங்கும் ஒரு கிராமப்புற நிதி நிறுவனத்தை நினைத்துப் பாருங்கள். அவர்களிடம் முழுமையான ஆவணங்கள் இல்லாமலும் இருக்கலாம். அது அவர்கள் குற்றவாளிகள் என்பதற்காக அல்ல. வறுமை காரணமாக இருக்கலாம். இயற்கை அனர்த்தங்களால் ஆவணங்களை இழந்திருக்கலாம். பல ஆண்டுகால இடம்பெயர்வின் விளைவாக இருக்கலாம். ஆனால் சட்டத்தின் தேவைகள் தெளிவாக இல்லாத நிலையில், அந்த நிறுவனம் என்ன செய்யும்? கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வதைவிட, கடன் வழங்குவதைத் தவிர்க்கும். அதனால் பாதிக்கப்படுவது யார்? ஏழை விவசாயிகளும், பெண் தலைமையிலான குடும்பங்களும்தான்.

அடுத்ததாக ஒரு வங்கியில் இடம்பெற்றிருக்கக்கூடிய நிதி முறைகேட்டை அம்பலப்படுத்தும் இரகசிய ஆவணங்கள் ஒரு புலனாய்வு ஊடகவியலாளருக்குக் கிடைக்கின்றன. இந்தச் சட்டமூலங்களின் கீழ், அவர் அறியாமலேயே அவரது கணினியிலும் கைப்பேசியிலும் விசாரணை அதிகாரிகள் அணுகலைப் பெற முடியும். அவரது இரகசிய தகவல் வழங்குநரின் அடையாளம் வெளிப்படுத்தப்படலாம். அவருக்கு நீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை முன்வைக்கும் வாய்ப்புகூட வழங்கப்படாமல் இருக்கலாம். இதன் விளைவு என்ன? ஊழலை வெளிக்கொணர முன்வருவோர் இனி மௌனமாகிவிடுவார்கள். ஊடகச் சுதந்திரம் பலவீனப்படும். பொது பொறுப்புக்கூறல் பாதிக்கப்படும்.

இதனால் இந்தச் சட்டமூலங்களை மீளாய்வு செய்து, அவை நிதி நடவடிக்கை பணிக்குழு நிர்ணயித்துள்ள உண்மையான தரநிலைகளுக்கு அமைவாக இருப்பதையும் நீதித்துறையின் மேற்பார்வையை வலுப்படுத்துவதையும் இந்தப் பாராளுமன்றம் பாதுகாக்க வேண்டிய அரசியலமைப்பு உரிமைகளையும் ஜனநாயகச் சுதந்திரங்களையும் உறுதிப்படுத்துவதையும் இச்சபையிடம் நான் வலியுறுத்துகின்றேன் என்றார்.