ஆப்பிரிக்கர்கள் அருவருப்பானவர்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பென்சில்வேனியாவில் நடைபெற்ற பேரணியில் ட்ரம்ப் கூறியதாவது: ”சோமாலியாவைச் சேர்ந்தவர்கள் அருவருப்பானவர்கள். பொதுவாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இங்கு குடிபெயர்ந்தவர்கள் அனைவருமே குப்பைகள் தான். அவர்கள் அமெரிக்காவுக்கு தேவையில்லை.
அதற்கு பதிலாக நார்வே, ஸ்வீடனிலிருந்து வருபவர்களை நாம் ஏன் ஏற்க கூடாது? உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் டென்மார்க்கிலிருந்து சில நல்லவர்களை எங்களுக்கு அனுப்புங்கள்.
சோமாலியா பேரழிவை ஏற்படுத்தும் இடம். சோமாலியர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள். அவர்கள் கப்பலை பின்தொடர்வதில் மட்டுமே சிறந்தவர்கள். இவ்வாறு ட்ம்ப் கூறினார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு சட்ட விரோதமாக குடியேறிவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். குடியேற்ற எதிர்ப்பு கொள்கைக்கு அமெரிக்கர்களிடம் ஆதரவு திரட்டும் விதமாக அவ்வப்போது ட்ரம்ப் இதுபோன்ற சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தற்போது ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இல்ஹான் ஒமர் மீது இன ரீதியாக ட்ரம்ப் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். இல்ஹான் ஒமர் சோமாலியாவைச் சேர்ந்த முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது.





