இந்தோனேசியாவில் ஹெலிகொப்டர் விபத்து ; பயணித்த 8 பேரும் பலி

இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் உள்ள பாம் ஒயில் தோட்டங்களுக்கு இடையே பறந்து கொண்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த எட்டு பேரும் உயிரிழந்ததாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

PT Matthew Air Nusantara நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் H130 ரக ஹெலிகொப்டரே விபத்துக்குள்ளாகியுள்ளது.

வியாழக்கிழமை (16) காலை மேற்கு கலிமந்தன் மாகாணத்தின் மெலாவி மாவட்டத்திலிருந்து  புறப்பட்ட ஐந்து நிமிடங்களில் இந்த ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இது குபு ராயா மாவட்டத்தில் உள்ள மற்றொரு பாம் ஒயில் தோட்டத்துக்குச் சென்று கொண்டிருந்தது.

தேடுதல் குழுவினர் செகாடாவ் மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதியில் சிதறிக் கிடந்த ஹெலிகொப்டரின் பாகங்களைக் கண்டெடுத்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு ஊழியர்கள் மற்றும் ஆறு பயணிகள் என மொத்தம் எட்டு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் ஒருவர் மலேசியாவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 270 மில்லியன் மக்கள் வாழும் தீவுக்கூட்ட நாடான இந்தோனேசியாவில், விமானம் மற்றும் ஹெலிகொப்டர் விபத்துகள் மற்றும் படகு விபத்துகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.