இஸ்ரேல் – ஈரான் வான்வெளி மூடல்: மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் தங்களது வான்வெளியை மூடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சனிக்கிழமை (28) அதிகாலை ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது வான்வெளியை பொதுமக்கள் விமானப் போக்குவரத்துக்காக மூடியுள்ளது. அதேவேளை, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) உடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம், ஈரானும் தனது வான்வெளியை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது.

வான்வெளி மூடப்பட்டுள்ளதால் மத்திய கிழக்கு வழியாகச் செல்லும் சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல சர்வதேச விமானங்கள் திசை மாற்றப்பட்டுள்ளதுடன், சில விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு, இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) மற்றும் ஈரானிய வான் பாதுகாப்புப் படைகள் உச்சகட்ட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டதாக கூறப்படும் இந்த பாரிய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானின் அடுத்தகட்ட பதிலடி எவ்வாறு இருக்கும் என்ற அச்சம் பிராந்திய நாடுகளிடையே அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அண்டை நாடுகளும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

சர்வதேச சமூகம் இந்த நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதுடன், மத்திய கிழக்கில் மேலும் பதற்றம் அதிகரிக்காமல் இருக்க தூதரக மட்ட முயற்சிகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.