ஈரான் மீது 2 வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தத்துக்கு இந்தியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய ஜலசந்தியான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவைத்துள்ளது.
இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் உலகின் பிற நாடுகளுக்கு செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பல்வேறு நாடுகள் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.
இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அனைத்து கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு காலக்கெடு விதித்தார். இந்தக் காலக்கெடு நேற்று அதிகாலை 5.30 மணியோடு நிறைவடைய இருந்தது. இந்த சூழலில், ஈரானுக்கு விதித்த காலக்கெடுவை 2 வாரங்களுக்கு நீட்டிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி, ஈரான் மீதான தாக்குதலை 2 வார காலத்துக்கு நிறுத்தி வைக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்தார். மேலும் இது ஒரு போர் நிறுத்தம் என்றும் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதைத் தொடர்ந்து போர் நிறுத்தம் செய்யப்படும் இந்த 2 வாரங்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவும் ஈரான் சம்மதித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இடைக்கால போர் நிறுத்தம் செய்ய உதவியதற்காக பாகிஸ்தானுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ள நிலையில், நிரந்தர போர் நிறுத்தத்துக்காக ஏப்ரல் 10-ம் தேதி இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ளது. இந்த போரில் பாகிஸ்தான் வெளிப்படையான மத்தியஸ்தராக அறியப்பட்டாலும் பின்னணியில் சீனாவின் பங்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.




