ஈரானில் வான்வழித் தாக்குதல்: உயர்மட்ட இராணுவ, பாதுகாப்பு தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேல் மேற்கொண்டதாக கூறப்படும் வான்வழித் தாக்குதலில், ஈரான் நாட்டின் துணை இராணுவப் படைத் தளபதி குலாம்ரெசா சுலைமானி மற்றும் அவரது துணைத் தலைவர் சையத் கரிஷி ஆகியோர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

மேலும், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான அலி லாரிஜானியும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

அலி லாரிஜானி, உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்குப் பின்னர் நாட்டின் முக்கிய பாதுகாப்புத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர் என கூறப்படுகிறது.

கடந்த ஆறு ஆண்டுகளாக பாசிஜ் படைப்பிரிவின் தளபதியாகப் பணியாற்றி வந்த குலாம்ரெசா சுலைமானி, அயதுல்லா கமேனிக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில் பாசிஜ் படையின் பல உயர்மட்ட அதிகாரிகளும் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் வெளியாகியுள்ளன. தெஹ்ரானில் உள்ள ஒரு ரகசிய தங்குமிடத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இந்த தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள போதிலும், இதுவரை ஈரான் தரப்பில் இருந்து எந்தவித உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், அலி லாரிஜானி சமூக வலைதளத்தில் கையெழுத்துப் பிரதியை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமா அல்லது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பதிவா என்ற குழப்பம் நிலவுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் நிலையில், சர்வதேச அளவில் இந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.