ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் – ட்ரம்ப்

நாங்கள் ஈரானுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த விடயத்தில் அவர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அரபிக் கடலின் சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க கப்பலை வேகமாக நெருங்கிய ஈரான் நாட்டின் ட்ரோனை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர், சிறிது காலத்துக்கு முன்பு அவர்களுடன் ஒப்பந்தம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது நடக்கவில்லை. அதனால் நாங்க் “மிட்நைட் ஹேமர்” என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கி தாக்குதல் நடத்தினோம்.

அவர்கள் தற்போது மீண்டும் “மிட்நைட் ஹேமர்” போன்ற ஒரு தாக்குதலை விரும்பவில்லை என நான் நினைக்கிறேன். பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறிய டிரம்ப், எந்த இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்று கூறவில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய்க்கிழமை (3) அமெரிக்காவின் “யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்”  விமானம் தாங்கிக் கப்பலை, அச்சுறுத்தும் விதத்தில் வேகமாக நெருங்கிச் சென்ற ஈரானின் ஷாஹித்-139 ட்ரோனையே அமெரிக்கப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

கப்பலிலிருந்து ஏவப்பட்ட அதிநவீன எப்-35சி போர் விமானமே அந்த ட்ரோனை நடுவானில் சுட்டு வீழ்த்தியுள்ளது.

இது தற்காப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என அமெரிக்கப் படையினர் தெரிவித்திருந்தனர்.

ஈரான் எல்லையிலிருந்து சுமார் 800 கி.மீ தொலைவில் அமெரிக்க கப்பல் இருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ட்ரோன் மீதான தாக்குதலின்போது அமெரிக்க படையினர் எவருக்கும் காயமோ அல்லது உபகரண சேதமோ ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.