மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து இன்று புதன்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் அங்கிருந்த எரிபொருள் தாங்கி ஒன்று தீப்பற்றியுள்ளது.
ட்ரோன்கள் நடத்திய தாக்குதலால் விமான நிலையத்திலுள்ள எரிபொருள் சேமிப்பு தாங்கி ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக குவைத் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையலி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலால் சொத்துக்களுக்கு மாத்திரமே சேதம் ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்புப் படையினர் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, குவைத் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளதாக குவைத் இராணுவம் அறிவித்துள்ளது.
வெடிப்புச் சத்தங்கள் கேட்டால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும், பாதுகாப்புப் பிரிவினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து, குவைத் விமான நிலையம் பலமுறை ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி ராடார் கட்டமைப்பை இலக்கு வைத்தும், 8 ஆம் திகதி அன்று எரிபொருள் தாங்கிகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.
தற்போது நிலவும் போர்ச் சூழலால் குவைத் சர்வதேச விமான நிலையம் ஏற்கனவே வழமையான வணிக விமான சேவைகளுக்காக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் ஆதரவுப் படைகளே இந்தத் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.





