ஜப்பானிய அதிகாரிகளால் சீன மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் ஆசியாவின் இரண்டு முன்னணி பொருளாதார நாடுகளுக்கு இடையே பதட்டங்களை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் நாகசாகி மாகாணத்திற்கு உட்பட்ட பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் வியாழக்கிழமை (12) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
47 வயதான படகின் கேப்டன் ஜப்பானிய மீன்பிடி திணைக்கள அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி தப்பியோடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடங்களில் தென் கொரியா மற்றும் தாய்வான் மீன்பிடி படகுகளை ஜப்பான் கைப்பற்றியுள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக கைப்பற்றப்பட்ட சீனப் படகு இதுவாகும்.
“வெளிநாட்டுப் படகுகளின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம்.”என ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் மினோரு கிஹாரா தெரிவித்துள்ளார்.
சீனாவின் வெளிவிவகார அமைச்சு கருத்துக்கான கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.



