பிரான்ஸ் லூவ்ரு அருங்காட்சியகத்தில் கொள்ளை : நெப்போலியனின் மற்றும் அரச கிரீட நகைகள் மாயம் !

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற லூவ்ரு அருங்காட்சியகத்தில் (Louvre Museum) வரலாற்றுச் சிறப்புமிக்க அரச கிரீட நகைகள் உட்பட விலைமதிப்பற்ற நகைகள் திருடப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் ஐரோப்பிய அருங்காட்சியகங்களின் பாதுகாப்பு குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம், ஞாயிற்றுக்கிழமை ( ஒக்டோபர் 19, 2025) அருங்காட்சியகம் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, அந்நாட்டு நேரப்படி காலை 9:30 மணியளவில் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருடர்கள் அருங்காட்சியகத்தில் நடந்து வரும் கட்டுமானப் பணியிடத்தைப் பயன்படுத்தி, எடைதூக்கி (Basket Lift/Crane) பொருத்தப்பட்ட லொறியைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்துள்ளனர்.

அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைந்த திருடர்கள், ‘ஆங்கிள் கிரைண்டர்’ கருவியைப் பயன்படுத்தி கண்ணாடி ஜன்னல்களை உடைத்துள்ளனர்.

அவர்கள் குறி வைத்தது, பிரான்ஸ் அரச கிரீடங்கள் மற்றும் அரச நகைகள் வைக்கப்பட்டுள்ள ‘அப்பல்லோ கேலரி’ (Galerie d’Apollon) என்ற பிரிவில் உள்ள இரண்டு கண்ணாடிப் பெட்டிகளை ஆகும்.

உள்துறை அமைச்சர் லோரன்ட் நூனெஸ் (Laurent Nuñez) பிரான்ஸ் இன்டர் ரேடியோவுக்கு அளித்த பேட்டியில்,

“இது ஒரு அனுபவமிக்க கும்பலின் கைவரிசையாகத் தெரிகிறது. அவர்கள் இடத்தை முன்கூட்டியே ஆய்வு செய்து, 7 நிமிடங்களில் நகைகளைத் திருடிக் கொண்டு தப்பியுள்ளார்கள் என்று தெரிவித்தார்.

திருடப்பட்ட நகைகள், மிக உயர்ந்த பாரம்பரியம் மிக்கவை மற்றும் அளவிட முடியாத மதிப்புடையவை என அவர் கூறினார். திருடப்பட்ட நகைகளில் நெப்போலியன் மற்றும் அவரது பேரரசிகளுக்குச் சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்க நகைகளும் அடங்கும். திருடப்பட்ட ஒன்பது நகைகளில், ஒன்று (பேரரசி யூஜீனியின் கிரீடம்) தப்பிக்கும்போது கைவிடப்பட்டு சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருட்டு நடந்ததற்கான தடயங்களைப் பாதுகாக்க லூவ்ரு அருங்காட்சியகம் உடனடியாக மூடப்பட்டது. இந்தத் துணிகரத் திருட்டு குறித்து பாரிஸ் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் சுமார் 80 இலட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கும் லூவ்ரு அருங்காட்சியகத்தில், லியோனார்டோ டாவின்சியின் புகழ்பெற்ற மோனா லிசா  ஓவியம் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற கலைப் படைப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்