வங்கதேச தேர்தல்: பி.என்.பி. கட்சி அமோக வெற்றி

:வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனால் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. சுமார் 18 மாதத்துக்கு பிறகு நேற்று அங்கு தேர்தல் நடத்தப்பட்டது.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரது அவாமி லீக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.இதையடுத்து, தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி), அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது.வங்கதேச நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதியில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மறைவால் மீதமுள்ள 299 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது. இதில் 50 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1,755 வேட்பாளர்கள், 273 சுயேட்சைகள் போட்டியிட்டனர்.நாடு முழுவதும் உள்ள 42,779 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

8 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். 9 லட்சம் பாதுகாப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டனர்.இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், பி.என்.பி தலைவர் தாரிக் ரஹ்மான் ஆகியோர் முன்கூட்டியே வாக்குப்பதிவு செய்தனர். வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான், டாக்காவின் உயர்மட்ட குல்ஷன் பகுதியில் உள்ள குல்ஷன் மாதிரி பள்ளி மற்றும் கல்லூரி மையத்தில் வாக்களித்தார்.

இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் பி.என்.பி. கட்சிக்கும், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.நேரம் செல்ல செல்ல பி.என்.பி. கட்சி பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பின் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் பி.என்.பி. கட்சி அமோக வெற்றி பெற்றது என உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.150 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளில் பி.என்.பி. கட்சி அபார வெற்றி பெற்றதை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தாரிக் ரஹ்மான் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்