சுவிசில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவு கூரலும்..
இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை அகிம்சை வழியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் 37வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் அனைவரினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வானது 04.05.2025 ஞாயிறு அன்று பாசல் மாநிலத்தில் நினைவுகூரப்பட்டு வருகின்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மலர்மாலை அணிவித்தலுடன் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களுக்குரிய ஈகைச்சுடரினைத் தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்களுக்கு தனித்தனி ஈகைச்சுடர்களாக ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர், சுடர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. சுவிஸ் வாழ் இளம் இசைக்ககலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும் வழங்கப்பட்டன.
நீண்ட காலத்திற்கு பிறகு பாசல் மாநிலத்தில் நினைவுகூரப்பட்டு வரும் இவ் வணக்க நிகழ்வில் அரங்கம் நிறைந்த பாசல் மாநிலம் வாழ் மக்கள் கலந்து கொண்டு தமது வணக்கத்தினைச் செலுத்தியமையானது எமக்கு நம்பிக்கையைத் தருவதாகவும் அமைந்துள்ளது.





