மாமனிதர் தேனிசை செல்லப்பா அவர்களின் ; நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு.

தனது தனித்துவக் குரலால் தமிழ்த்தேசியத்திற்கு வலுச்சேர்த்த முன்னணிக் கலைஞரான மாமனிதர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது பேர்ண் மாநிலத்தில் 03.05.2026 ஞாயிறு அன்று மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் கனத்த இதயங்களுடன் கலந்து கொண்டிருந்தனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அகவணக்கத்தினைத் தொடர்ந்து மக்களால் சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் சூரியத்தேவனின் வேருகளே மலர்வணக்கப்பாடலைத் தொடர்ந்து கலைஞர்களால் கரோக்கே முறையில் மாமனிதர் தேனிசை செல்லப்பா அவர்களின் குரலில் வெளிவந்த எழுச்சிப் பாடல்களும் இசைக்கப்பட்டன.

அரங்கம் நிறைந்து நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண்ட இவ்வணக்க நிகழ்வில் மாமனிதர் தேனிசை செல்லப்பா அவர்கள் பற்றிய நினைவுப்பகிர்வுகளை கலைஞர்கள், போராளிகள், இனஉணர்வாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு