“ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் உறுதி அளித்தார்!” – டிரம்ப்

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஒக். 15,) தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிரான உலகளாவிய அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சியில் இந்தியாவின் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய விடயமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓவல் அலுவலகத்தில் வன்முறைக் குற்றங்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் எஃப்.பி.ஐ. பணிப்பாளர் காஷ் படேல் ஆகியோர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவை நம்பகமான கூட்டாளியாகப் பார்க்கிறீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப் கூறியதாவது,

“ஆம். பிரதமர் மோடி எனது நண்பர். எங்களுக்குள் சிறந்த உறவு இருக்கிறது. இந்தியா ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. மேலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று என்னிடம் இன்று உறுதியளித்தார்.இது ஒரு பெரிய நிறுத்தமாகும். இப்போது சீனாவையும் இதைச் செய்ய வைக்க வேண்டும்.

ரஷ்யா அபத்தமான போரைத் தொடர்கிறது. இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவும் இராணுவ வீரர்கள் உட்பட இலட்சக்கணக்கானோரை இழந்துள்ளது. இந்தப் போர் தொடங்கியிருக்கவே கூடாது. முதல் வாரத்திலேயே ரஷ்யா வெற்றி பெற்றிருக்க வேண்டியது, ஆனால், நான்காவது ஆண்டை அடைந்துள்ளார்கள்.

போர் நிறுத்தத்தைக் காண நான் விரும்புகிறேன். எனவே, இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை.

மத்திய கிழக்கில் கடந்த வாரம் நாங்கள் செய்ததை ஒப்பிடும்போது இது (ரஷ்யா-உக்ரைன் போர்) எளிதானது என்பது உங்களுக்குத் தெரியும். அது 3,000 ஆண்டுகள் பிரச்சினை. ஆனால், இது வெறும் 3 ஆண்டுப் போர் மட்டுமே. நாங்கள் ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்திக் காட்டுவோம். ரஷ்ய ஜனாதிபதி புட்டின் போரை நிறுத்துவார் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு குறித்து இந்திய அரசு அதிகாரபூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் மசகு எண்ணெய் இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.