மீண்டும் வடகிழக்கு இணைந்த மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சராக இருந்திருந்த வரதராஜப்பெருமாளிற்கு அரசியல்புனர்வாழ்வளிக்க இந்திய அரசு முனைப்பு காண்பித்துவருகின்றது.
இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுப்பது என்பது பற்றி ஆராய்வதற்காக தமிழ்த் தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களில் பங்கேற்பதற்கு தயாராக இருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்துக் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பு எனில் அதில் பங்கேற்பது குறித்து கட்சியே தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலம் நடத்தப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், அதற்குரிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கிலும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது.
இந்திய துணைதூதரகத்தின் பின்னணியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இ பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அந்தக் கட்சியின் சார்பில் எவரும் பங்கேற்றிருக்கவில்லை.
வடகிழக்கு இணைந்த மாகாணசபையின் முதலமைச்சராக இருந்திருந்த வரதராஜப்பெருமாள் பங்கெடுப்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஈழமக்கள் ஜனாநாயக தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அழைப்புவிடுக்கப்பட்டிருக்கவில்லை. அதேவேளை தனிப்பட்ட சில காரணங்களால் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும், எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் சந்திப்புக்களில் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொள்வர் என எதிர்பார்ப்பதாகவும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.